பொதுமக்களிடம் காசநோய்(TB) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக காச நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம் காசநோயை வென்று காட்ட முடியும்
ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி உலக காச நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இறப்பை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாகும்
உலக சுகாதார அமைப்பு (WHO) கூற்றுப்படி, காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் பாதிப்பாகும். பெரும்பாலும் நுரையீரலை தாக்குகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ மற்றவருக்கு பரவுகிறது.
ஆண்டுதோறும் 10 மில்லியன் நபர்கள் டிபி நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் நோய் பாதிப்பு தீவிரமடைந்து 1.5 மில்லியன் நபர்கள் உயிரிழப்பதால் கொடிய நோய் கருதப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுரையீரல் நிபுணர் கே திருப்பதி (SIMS Hospital, Chennai) கூறியதாவது, “காசநோய் மெதுவாக வளரக்கூடியது. இதன் ஆரம்ப கால அறிகுறிகளை பலரும் பருவகாலத் தொற்று, சோர்வு, மாசுபாடு என தவறாக நினைத்துகொள்கிறார்கள். பெரும்பாலான நோயாளிகள் அறிகுறிகள் தோன்றி பல வாரங்களுக்குப் பிறகுதான் மருத்துவரை நாடுகிறார்கள். அச்சமயத்தில் காச நோய் தீவிர கட்டத்தை எட்டிவிடுகிறது. எனவே ஆரம்ப கால அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது அவசியம்” என்கிறார்.
காசநோய் ஆரம்பகால அறிகுறிகள்
தொடர் இருமல் – இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்கும். இதைச் சாதாரண சளி அல்லது தொண்டை எரிச்சல் என்று பலர் தவறாக நினைத்துவிடுகிறார்கள்.காய்ச்சல் – அடிக்கடி லேசான காய்ச்சல் அல்லது மாலை நேரங்களில் உடல் சூடாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதை பலரும் உடல் சோர்வு என்று அலட்சியப்படுத்துகிறார்கள்திடீர் உடல் குறைவு -காரணம் இன்றி உடல் எடை படிப்படியாகக் குறைவது மட்டுமின்றி பசியின்மை உண்டாகும்உடல் சோர்வு – எப்போதும் உடல் பலவீனமாக மற்றும் அதிக சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்இரவில் வியர்த்தல் – குளிர்ந்த அறையில் தூங்கினாலும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல் ஏற்படும்.இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது நல்லது.

காசநோயில் உலகளவில் முதலிடம்
உலகெங்கிலும் உள்ள காசநோயாளிகளில் 25 சதவீத பேர் இந்தியாவில் உள்ளனர். 2024ல் மட்டுமே இந்தியாவில் சுமார் 26 லட்சம் பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கும் 187 பேருக்கு காசநோய் இருப்பதாக புள்ளிவிரவரங்கள் தெரிவிக்கின்றன.
காசநோய் வராமல் தடுக்கும் வழிகள்
- இருமும் போதும் தும்மும் போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெளியே சென்றால் மாஸ்க் அணிவது நல்லது.
- காற்றோட்டம் இல்லாத மூடப்பட்ட இடங்களில் TB எளிதில் பரவும். எனவே, ஜன்னலை திறந்துவையுங்கள். அறைகளை காற்றோட்டமாக வைத்திருங்கள்.
- சத்தான உணவுகள் சாப்பிடுவது மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த முடியும். மேலும் போதிய தூக்கம் அவசியமாகும்.
- BCG தடுப்பூசி குழந்தைகளை கடுமையான TB-யிலிருந்து பாதுகாக்க செய்கிறது.
- சிகிச்சை எடுத்து வரும் TB நோயாளிகளிடம் நெருங்கிய தொடர்பை தவிர்க்கவும்.
குறிப்பு: புகைப்பிடிப்பவர்கள், பலவீனமான எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் கூட்டமான இடங்களில் வாழ்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவும். அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்யவும்
பொறுப்பு துறப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் அல்லது மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும்