ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 42 ஆக உயர்வு… அமெரிக்காவின் அதிரடி ‘மாஸ்டர் பிளான்’!

ஈரானுக்கு எதிரான போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அரசு தனது ராணுவ ஆள்சேர்ப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதுவரை ராணுவத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 34 ஆக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஒரேடியாக 42 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போர்க்களத்தில் கூடுதல் வீரர்களின் தேவை அதிகரித்துள்ளதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் எனப் பார்க்கப்படுகிறது.

ஈரான் – அமெரிக்கா போர் தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கும் வேளையில், 5 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் மீது தரைவழித் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக அதிகப்படியான வீரர்களைத் திரட்டவே இந்த வயது வரம்பு உயர்வு என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த புதிய மாற்றம் அமெரிக்காவின் முப்படைகளுக்கும் (விமானம், கப்பல், தரைப்படை) பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ராணுவத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது 18 என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீதான போரைத் தொடர அமெரிக்காவிற்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாகச் செய்திகள் கசிந்துள்ள நிலையில், ராணுவ வயது வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த ‘மூவ்’ ஈரானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version