பெங்களூரு: பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக ஆட்டோ-க்களுக்கு பயன்படுத்தப்படும் LPG (Auto LPG) எரிவாயு கடுமையான தட்டுப்பாட்டை நிலவியது.
இதனால் நகரின் பல LPG நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. குறிப்பாக சில தனியார் LPG விற்பனை நிலையங்கள் மூடப்பட்டோ அல்லது பகுதி நேரம் மட்டும் செயல்பாட்டில் இருந்தது.
இந்தியாவில் மற்ற நகரங்களை காட்டிலும் பெங்ளூரில் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்சிக்கள் அதிகம். இதனால் பெங்களூர் போக்குவரத்துக்கு Auto LPG மிகவும் அவசியமான ஒன்று. இத்தகைய சூழ்நிலையில் எல்பிஜி இருப்பு குறைந்த நிலையில் ஆன்லைன் டாக்சி எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் டிமாண்ட் அதிகரித்த காரணத்தால் கட்டணமும் அதிகரித்தது. இது பெங்களூர் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியது.
IOCL உடனடி நடவடிக்கை
இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் (IOCL) உடனடியாக தலையிட்டு, கர்நாடக மாநிலத்தில் Auto LPG விநியோகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு சந்தையில் ஏற்பட்ட பதற்றம் குறைந்து, நிலைமை படிப்படியாக சீராகத் தொடங்கியது.
IOCL வெளியிட்ட தகவலின்படி, இந்த அதிகரித்த தேவையை சமாளிக்க கூடுதல் LPG சப்ளை அனுப்பப்பட்டுள்ளன. இது அடுத்த சில நாட்களில் விநியோகத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தது.
எல்பிஜி நிலையங்களில் சிக்கல்கள்
பெங்களூருவில் முக்கிய LPG விநியோக மையங்களில் ஒன்றான ப்ரவிங் சர்வீஸ் ஸ்டேஷனில் வியாழக்கிழமை LPG முழுமையாக தீர்ந்தது. வெள்ளிக்கிழமை காலை புதிய சரக்கு வந்தாலும், அதிக தேவையால் மதியத்திற்குள் அது மீண்டும் காலியானது. இதுக்குறித்து IOCL அதிகாரிகள் கூறுகையில், புதிய சரக்குகள் தொடர்ந்து வரவுள்ளதாகவும், நிலைமை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்தனர்.
ஆட்டோ சேவைகளில் தாக்கம்
LPG பயன்படுத்தும் ஆட்டோக்கள் நகரின் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி மொத்த ஆட்டோ சேவைகளில் சுமார் 30% வாகனங்கள் LPG பயன்படுத்துகின்றன. சில ஆட்டோ டிரைவர்கள் எரிபொருள் கிடைக்காததால் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர் என தெரிகிறது.
தற்போது IOCL மேற்கொண்டுள்ள விநியோக விரிவாக்க நடவடிக்கைகள் காரணமாக, Auto LPG தட்டுப்பாடு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் விநியோக நிலைமை முழுமையாக சீராகும் வாய்ப்பு உள்ளது.
