தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவில் உருவானதாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம், தற்போது அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது முன்வைத்துள்ள பகிரங்கக் குற்றச்சாட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ்கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் வெளியீடு தள்ளிப்போனது. இந்தச் சூழலில், நேற்று திடீரென முழுத் திரைப்படமும் இணையதளங்களில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படம் லீக் ஆனதற்குத் தமிழக அரசும் (திமுக), பாஜக-வுமே காரணம் என ஆதவ் அர்ஜுனா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படத்தை இணையத்தில் தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவே திட்டமிட்டு வெளியிட்டிருப்பாரோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. சென்சார் கிடைக்காததால் படத்தை வெளியிட முடியாத சூழலில், அனுதாபத்தைத் தேடிக்கொள்ள இவர்களே இப்படிச் செய்திருக்க வாய்ப்புள்ளது.”
“திரைப்படத் துறையில் நடக்கும் தொழில்நுட்பக் கசிவுகளுக்கும் பாஜக-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தோல்வியைத் தாங்க முடியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவது முறையல்ல.”
வினோஜ் பி.செல்வத்தின் இந்தக் கருத்துக்குத் தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “கோடிக்கணக்கான ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படத்தை யாராவது தாமாகவே இணையத்தில் வெளியிடுவார்களா? படத்தின் வீச்சைத் தடுக்கவே இது போன்ற சதி வேலைகள் நடக்கின்றன” என ஆதவ் அர்ஜுனா தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதைக் குறித்துத் தவெக தரப்பில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளியாகிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது அரசியல் சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
