வீரமண்ணின் பண்பாட்டுச் சுடர்! உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு இதயங்கனிந்த சித்திரை திருநாள் வாழ்த்துகள்! – வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் உருக்கமாகத் குறிப்பிட்டிருப்பதாவது,”தமிழர் பண்பாட்டின் ஆழமான அடையாளமாகத் திகழும் சித்திரை மாதத்தின் முதல் நாள், முதுவேனில் பருவத்தின் துவக்கமாக தொன்மைக்காலம் தொட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் மழையைத் தாண்டி, தை மாதத்தில் அறுவடை கொண்டாட்டமான பொங்கலைக் கொண்டாடி, நிலத்திற்கும், ஆவினங்களுக்கும் நன்றியர்ப்பணம் செய்த தமிழர்கள், மாசி, பங்குனியில் வசந்தம் மற்றும் இளவேனிலை வரவேற்று மகிழ்ந்து, சித்திரையில் கடற்கரை மணற்பரப்பிலும், ஆற்றுப்படுகைகளிலும் கொண்டாட்டக் களிப்பில் மூழ்கி விழாக்களை நடத்தி வந்துள்ளனர்.

இளைய தலைமுறைக்கு சித்திரை மாதமே வசந்த விழாக்களின் உச்சமாக விளங்குகிறது என இலக்கியங்கள் புகழ்கின்றன. “சித்திரைத் திங்கள் சேர்ந்தது இனிதே; இதுவே இந்திர விழா கொண்டாடும் காலம்” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கவித்துவமாக வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பல இலட்சிய வீரர்கள் தங்கள் வியர்வை, கண்ணீர், இரத்தத்தை அர்ப்பணித்து கட்டியெழுப்பிய திராவிட இயக்கத்தின் கோட்டையை சிதைக்க முயலும் சனாதன இந்துத்துவ சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் ஆதிக்க மனப்பான்மையையும் அகங்கார அணுகுமுறையையும் எதிர்த்து, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உறுதியான ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், இத்தேர்தலுக்குப் பிறகும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முறை நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக, தமிழக வாக்காளர்கள் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை வழங்கி வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

“திராவிட மாடல் நல்லாட்சி தமிழகத்தில் மேலும் வலுப்பெறட்டும்” என்ற உற்சாக உணர்வுடன், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

Exit mobile version