சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஜேமி ஓவர்டன் நீக்கப்பட்டு அவரது இடத்தில் அகீல் ஹொசைன் சேர்க்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சர்ஃபராஸ் கானை உள்ளே கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் நாளைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த முறை சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி வெல்லும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு ஓரளவுக்கு உதவி கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜேமி ஓவர்டன் நீக்கப்பட்டு அந்த இடத்தில் அகீல் ஹொசைன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த போட்டியில் ஜேமி ஓவர்டன் சிறப்பாக ஆடி இருந்தார்.
இருந்தாலும் ஓவர்டன் ஸ்பின்னர்களிடம் திணறுவர். மறுபக்கம் பஞ்சாப் அணியில் மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், பார்ட்லெட், வைஷாக் விஜயகுமார் உள்ளிட்ட தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இதனால் பேட்டிங் லைன் அப்பில் சர்ஃபராஸ் கான் அல்லது உர்வில் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணி மீது பஞ்சாப் அணி கடுமையான ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த சீசனில் அந்த ஆதிக்கத்தை சிஎஸ்கே அணி முடிவுக்கு கொண்டு வரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய மூவருக்கும் நன்றாகவே செட் ஆகும்.
இதனால் இம்முறை சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கொஞ்சம் நிதானமாக தொடங்கி, அடுத்த சில ஓவர்களில் கியரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே அணியின் அப்ரோச்சிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இதனால் முதல் வெற்றியை சிஎஸ்கே அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.






























