வரலாற்றில் முதல்முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டதன் மூலம், உலகில் கொசுக்கள் இல்லாத நாடு என்ற அதன் தனித்துவமான நிலை முடிவுக்கு வந்துள்ளது.
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே மூன்று கொசுக்களைக் கண்டுபிடித்ததாக ஐஸ்லாந்து இயற்கை அறிவியல் நிறுவனத்தின் பூச்சியியல் வல்லுநரான மத்தியாஸ் ஆல்ஃபிரெட்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். கண்டறியப்பட்டவை ‘குலிசெட்டா அன்யூலேட்டா’ (Culiseta annulata) வகையைச் சேர்ந்தவை என்றும், அவற்றில் இரண்டு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டார்டிகாவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து மட்டுமே கொசுக்கள் அற்ற உலகின் சில இடங்களில் ஒன்றாக நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது அங்கு கொசுக்கள் நிலைபெறத் தொடங்கியுள்ளது மத்தியாஸ் ஆல்ஃபிரெட்ஸனின் இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் கொசுக்கள் கப்பல்கள் அல்லது சரக்குக் கொள்கலன்கள் (cargo containers) மூலம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார். மேலும், இந்தக் கொசு இனம் ஐஸ்லாந்தின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதை உறுதிசெய்ய, அடுத்த வசந்த காலத்தில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




























