Featured
Featuredஇந்தியாசுற்றுலாசெய்திகள்தமிழகம்

நெல்லை, சேலம் ரூட்டில் பாரத் கௌரவ் ரயில்… 11 நாட்கள் சுற்றுலா- உஜ்ஜயினி முதல் படேல் சிலை வரை!

ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் பாரத் கௌரவ் சிறப்பு ரயில்கள் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் நெல்லையில் புறப்பட்டு வட இந்திய மாநிலங்களில் வலம் வரும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரயில்கள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் கௌரவ் திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் நாலாபுறங்களில் மக்கள் பயணித்து சுற்றி பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் நெல்லையில் இருந்து வரும் ஏப்ரல் 25ஆம் தேதி புறப்பட்டு மே 5ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ரயில் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சேவை

இந்த திட்டத்தை SZBG என்று குறிப்பிட்டுள்ள ஐஆர்சிடிசி நிர்வாகம், சுற்றுலா கட்டணமாக ஒருவருக்கு 31,910 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் மூலம் உஜ்ஜயினியில் உள்ள ஓம் காரேஷ்வர், மகாஹலேஷ்வர் கோயில்களை சுற்றி பார்க்கலாம். இதையடுத்து சோம்நாத்தில் உள்ள சோமநாதர் கோயில், துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோயில் மற்றும் பெட் துவாரகா, பாவ் நகரில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கடல் கோயில், வதோதராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலை ஆகியவற்றை பார்வையிடலாம்.

நெல்லை, தென் மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பு

இந்த ரயிலானது நெல்லையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்கிறது. எனவே தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வட இந்திய சுற்றுலா செல்ல விரும்புவோர் சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறப்பு ரயில் வசதியும், உணவு, தங்கும் ஏற்பாடுகளும்

பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை பொறுத்தவரையில் முழுவதும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் நிறைந்தது. மொத்தம் 14 பெட்டிகள் கொண்டிருக்கும். 11 3AC பெட்டிகள், ஒரு பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் சுற்றுலா செல்லும் இடங்களில் ஏசி வசதிகள் உடன் கூடிய தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

அதுமட்டுமின்றி சுற்றுலா தலங்களை பார்வையிட ஏசி போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படும். தமிழக மக்கள் சுற்றுலா செல்வதால் அவர்களின் வசதிக்கேற்ப தென்னிந்திய சைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயணிகள் உடன் சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர்களும் உடன் செல்வர்.

ராமேஸ்வரம், திருப்பதி சுற்றுலா ரயில்

முன்னதாக வட மாநில மக்கள் தென்னிந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பாரத் கௌரவ் சிறப்பு ரயில்களை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்தது. இதன்மூலம் ஜெய்ப்பூர், அஜ்மீர், பில்வாரா, சிட்டார்கர், ரட்லம் ஆகிய பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கன்னியாகுமரி சுற்றுலா, திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோயில், மர்காபூர் மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்க கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 11 இரவு, 12 பகல் பொழுது சுற்றுலா மேற்கொள்ளலாம். இதற்காக ஒரு நபருக்கு 31,005 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 27,905 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *