கூடலூர் : தொடர் விடுமுறையால், தேக்கடியில் உள்ள மலர் காண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.தமிழக-கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மண்ணாரத்தரை கார்டன் சார்பில், தேக்கடி 18வது மலர்கண்காட்சி கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது கேரளாவில் பள்ளிகள் விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.இந்த மலர் கண்காட்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகளை கவரும் வண்ணம் வகையில் கடற்கன்னிகள், ராட்சத ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம், இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும், இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலர்கண்காட்சி வரும் மே.3ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இதை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையிலும், தொடர் விடுமுறை காரணமாகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.





























