மும்பை: ஐபிஎல் 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த விறுவிறுப்பான அனல் பறந்த களத்தில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேக்கப் டஃபி அவரை வீழ்த்தினார். ஹர்திக்கின் சகோதரர் க்ருனால் பாண்டியாவின் இந்த விக்கெட்டை கொண்டாடிய விதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஞாயிற்றுக்கிழமை இரவு வான்கடே மைதானத்தில் மோதின. கிட்டத்தட்ட நானரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டம், ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. மொத்தமாக 40 ஓவர்களில் 462 ரன்கள் குவிக்கப்பட்டன, இதில் 36 பவுண்டரிகளும் 29 சிக்ஸர்களும் அடங்கும்.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தில், ஒரு முக்கியத் தருணம் அனைவரையும் கவர்ந்தது. மும்பை அணியின் வெற்றி வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, 21 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், 15வது ஓவரில் பெங்களூருவின் பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் ரோமரியோ ஷெப்பர்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் வீழ்த்தப்பட்டபோது, அவரது மூத்த சகோதரரான க்ருனால் பாண்டியா உற்சாகமாக அதை கொண்டாடினார். இன்னும் சொல்லப்போனால், எப்படி தெருவில் நாம் விளையாடும் போது, அண்ணனையோ, தம்பியோ ஆட்டமிழந்தால், எப்படி நாம் வெறுப்பேற்றுவோமோ, அதே போல் ஒரு செய்கையை தான் க்ருனால் பாண்டியா செய்தார். க்ருனாலின் இந்தக் கொண்டாட்டம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்த மூன்றாவது தோல்வியாகும் இது. இந்தத் தோல்விக்குப் பிறகு, அணியின் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “மிகவும் நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பல விஷயங்களை இப்போது மீண்டும் யோசிக்க வேண்டும். இது நிச்சயமாகப் பலனளிக்கவில்லை. சில ஆட்டங்களில் டாஸ் வென்றோம், ஆனால் நாங்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு பிரிவில் என்னென்ன ஆப்சன்கள் உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும்.”
“இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப, நாங்களும் சிறப்பாக பேட் செய்தால் நன்றாக இருக்கும். நாங்கள் இன்னும் கிரிக்கெட் விளையாட வேண்டும், சிறப்பாக பேட் செய்ய வேண்டும், சிறப்பாக பந்துவீச வேண்டும். அதைச் செய்தால், டாஸைப் பொருட்படுத்தாமல் வெல்லலாம்,” என்று பாண்டியா தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக, வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இதுவரை ஒரு ஆட்டத்திலும் தோற்காத பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை எதிர்கொள்கிறது. பஞ்சாப் இந்த சீசனில் தோல்வியைச் சந்திக்காத இரண்டு அணிகளில் ஒன்றாகும்.





























